
நான் வாழ்ந்த கருவறையில் உயிர் பெற்ற என் ஜீவன்
அக்கா அக்கா என்று என்னை சுற்றி ரீங்காரமிடும் சிங்காரம்
கைகளை பிடித்து கொண்டு பள்ளி வந்த பட்டாம்பூச்சி
முத்தம் கொடுத்து கன்னங்களை ஈரமாக்கிய என் முதல் குழந்தை
உடல்நலம் சரி இல்லாத காலத்தில் தாயாகும் என் கண்மணி
ஒரு நாள் கூட என்னை பிரியாத என் ஜீவனே
நீ அங்கே நான் இங்கே
வெறும் காற்றின் வழியே நம் உரையாடல்
மொட்டை மாடி நிலவின் அடியில் நீ என் மடியில்
நீ பாடிய பாடல்கள்
நான் சொன்ன கதைகள்
அன்னை ஊட்டிய சாதம்
என எல்லாமே நினைவுகளில் மட்டும்
எப்போது கிடைக்கும் நாம் இருவர் சேர்ந்து இருந்த வசந்த காலம்
யாருக்கு முதலில் தலை கட்ட வேண்டும் என்று அன்னையிடம்
சண்டை போட்ட பரபரப்பான அதிகாலை
பள்ளிகூட புளிய மரத்தடியில் நான் சேர்ந்து விளையாடிய மதிய வேளை
கார்டூன் பார்த்து சாதம் உண்ட அந்த மாலை வேளை
எதிர் பார்த்து காத்து இருக்கிறது என் இதயம்